அன்புடன் வரவேற்கின்றோம்

திங்கள், 12 அக்டோபர், 2020

பிரிவிலை எங்கும் பேதமில்லை


பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக
பள்ளந்தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
தலையைத்தாழ்த்து! முகத்தைத்தாழ்த்து!

தோளையும் உதட்டையும் தொங்கவை!


ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!

நக்கிக்குடி! அதை நல்லதென்றுசொல்!

தாழ்ந்துதாழ்ந்து தாழ்ந்த நாயினும்

தாழ்ந்துபோ! குனிந்து தரையைக்கௌவி

ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!

பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே

அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!


கன்னங்கருத்த இருட்டின் கறையே.

தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்;

மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!

இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

விழித்தவிழியில் மேதினிக் கொளிசெய்!

நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!


உன்வீடு - உனது பக்கத்தின் வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு! வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!

ஏறி நின்று பாரடா எங்கும்;


எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!

பாரடா உன மானிடப் பரப்பைப்!

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!

'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்களட்பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு.

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

பிரிவிலை எங்கும் பேதமில்லை


உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்; 'உடைமை மக்களுக்குப் பொது'

புவியை நடத்துப் பொதுவில் நடத்து!

வானைப் போல மக்களைத் தாவும்

வெள்ளை அன்பால் இதனைக்

குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக